மதுரையில் பிறந்து, நினைவு தெரிந்து பத்து வருடங்கள் மதுரையிலேயே சுற்றித் திரிந்தவன் நான். எனக்கும் என் போன்ற பலருக்கும் "என் ஊரின் உண்மை முகம் இது தான் என்று உலகம் அறிந்து கொள்ள வேண்டும்" என்ற ஆசை எப்பொழுதும் தொற்றிக்கொண்டு தான் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதை நிறைவேற்ற "என் பெயர் தமிழை" ஒரு மேடையாகக் கருதி இப்பதிப்பினை எழுதுகிறேன்.
முதல் ரக மக்கள் அப்படி நினைத்துக் கொள்ள முக்கியக் காரணம் மதுரையின் வரலாறு, கதைகள் மற்றும் மதுரைக்கு வரும் விருந்தாளிகள் செய்யும் வேலை. கோவில்கள் இருக்கு தான் இல்லை என்று சொல்ல வில்லை. கோவில்கள் மட்டுமே மதுரை இல்லை என்று சொல்கிறோம். இரண்டாம் ரக மக்கள் அப்படி நினைத்துக் கொள்ள ஒரே காரணம் தமிழ்த் திரையுலகம் தான். மதுரையைச் சுற்றிச் சுழலும் கதைக்களம் என்றாலே கதாப்பாத்திரங்கள் கையில் அல்லது லுங்கிக்கும் உடலுக்கும் இடையில் கத்தி வைத்துக் கொண்டு சுற்றுவார்கள். உயிர் நண்பனையோ காதலியையோ ஏதோ ஒரு வகையில் வம்பு செய்த ஒரே காரணத்தால், அவனையும் அவன் கூட்டாளிகளையும் விரட்டி விரட்டி பழிவாங்குவார் கதாநாயகன். இது தான் மதுரையா? ஒவ்வொரு முறை இது போன்ற காட்சிகளைப் பார்க்கும் போதும், இதழ்களில் வாசிக்கும்போதும் வெறுப்பெரும். சில படங்கள் உண்டு இதற்கு விதிவிலக்காய்!
என்னைப் பொறுத்த வரை மதுரை சற்று வித்தியாசமான நகரம். மேற்கண்ட கோவில்களும் வன்முறையும் உண்டு தான். ஆனால் அதற்கு மேலே ஒன்று உள்ளதென்று சொல்லியிருந்தேன். அது-நட்பு, பாசம். யார் என்று தெரியாத ஒருவர், நீங்கள் ஒரு உதவி என்று கேட்க நினைக்கும் முன் உதவ முன் வரும் பலரை நான் பார்த்திருக்கிறேன். "மதுரைக்காரர்கள் பாசக்காரர்கள்!" என்றொரு
பேச்சு உண்டு. உண்மை தான். புதிதாய்ப் பார்ப்பவர்களிடமும் பல ஆண்டுகள் பேசிப் பழகியது போல் மிகவும் சகஜமாய் ஒருவரால் பேச முடியும் என்று நான் பார்த்து உணர்ந்துகொண்டது மதுரை மக்களிடம் தான்.
8.11.2011
"மதுரை-பாசமும் வீரமும்"
சரித்திரத்தில் தனக்கென உயர்இடமும்,
சங்கத்திற்கு தானே இடமாகவும்
தமிழுக்குத் தன்னைத் தானஞ்செய்து
கலைக்கு முன்மாதிரியாய்த் திகழ்ந்து
வீரம் தரும் நிகழ்வையும்
பாசங் காட்டும் உயிரையும்-பெற்று
காந்திக்கு ஓர் இடமும்
நாயகருக்கு ஓர் இடமும்-தந்து
மனங் கமழும் மல்லிகையும்
மனங் கவரும்தன் நம்பிக்கையும்-படைத்து
அன்பும் கொடையும் கூடிவாழும் ஊர்ஒன்றே
பார்சொல்லும் அஃது மதுரை என்றே
-பிரதாப் குமார்
(தமிழ்)
-பிரதாப் குமார்
(தமிழ்)
மரியாதைக்கு கோவை,
ஈரோடு,சேலம் மக்கள் என்றால், எளிமையாய் உரிமையாய்ப் பேசிப் பழகுவதற்கு மதுரை மக்கள். "சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை" என்று கூற விரும்பவில்லை. சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான் திரைப்படங்கள் காட்டும் மதுரை மட்டுமே மதுரை அல்ல. மதுரையின் மனம் அறிய, குணம் புரிய செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். "திரைப்படங்கள் காட்டும் மதுரையை முழுமையாய் நம்பாமல், மதுரைக்கே சென்று ஓரிரு நாட்கள் இருந்து மக்களிடம் பேசிப் பாருங்கள்." நான் சொல்வது புரியும்!