Monday, 27 July 2015

பாரதத்தின் ரத்தினம் திரு கலாம்

  மாநிலம், மதம், மொழி, நிறம் ஆகியவற்றைக் கடந்து, கோடிக்கணக்கான இந்திய மாணவர்களுக்கும் ஏன் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் பிடித்த ஒரு நபர் என்றால் அது திரு.அ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் தான். "மிகவும் எளிய குடும்பம்  இப்படி ஒரு மாமனிதரைத் தந்தது இந்தியாவிற்கு வரம் தான்!" என்பதை ஆணித்தனமாகக் கூறுவதில்  பரவசம் கொள்ளும் உள்ளங்கள் இங்கு பல கோடிகள்.

 தன் வாழ்நாளில் இத்தனை வருடங்களை  இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்காக சமர்ப்பித்த இவரது அறிவியல் ஞானம் எத்தகையது. இறுதிவரை கற்கத் துடிக்கும் நேர்மையான  மாணவராக, கற்பிக்கத் துடிக்கும் உண்மையான ஆசிரியராக, இளம் தலைமுறைக்கு நல்ல வழிகாட்டியாக வாழ்ந்து காட்டிய இவரை நாம் என்ன சொல்லி போற்றுவோம் என்று தெரியவில்லை. துருதுருவென கேட்போரை ரசிக்க வைக்கும் இவரது குழந்தைப் பேச்சை இனி நாம் எங்கே சென்று கேட்பது?பார்ப்போர் மனதை நெகிழ வைக்கும் இவரது வெள்ளந்தியான புன்சிரிப்பை இனி நாம் எங்கே சென்று காண்பது??


 நமது 64வது சுதந்திர தினத்தன்று ஆசை ஆசையாய் எழுதிய வரிகள்...  

15.8.2010

            “இளையோர்களின் தலைவன்

ராமேஸ்வரம் தந்த ஒரு மனிதன் 
எந்நாளும் மாறாத ஒரு புனிதன் !

பொய்யின் பொருள் அறியாத மனிதன் 
தன்பால் குற்றம் சேராத புனிதன் !!

வெள்ளிப் புருவம் பெற்ற மனிதன் 
வைர உள்ளம் கொண்ட புனிதன் !

உதவும் கரங்கள் கொண்ட மனிதன் 
அன்பின் சிகரம் வென்ற புனிதன் !!

பெருமை வெறுக்கும் ஒரே மனிதன்
இளையோர் போற்றும் ஒரே புனிதன்

"அக்னிச் சிறகுகள்" செய்த மனிதன் 
பாரதம் பெற்ற அறிவியல் புனிதன் !!

மாணவர்கள் நண்பன் நமது கலாம் 
இதோ உமக்கு எங்கள் சலாம் !!
                                                                    - பிரதாப் குமார் 
                                                                             (தமிழ்)

         இந்தியாவின் 11ஆம் ஜனாதிபதியாகப் பணிபுரிந்த திரு கலாம் அவர்கள் நம் நாட்டின் மிக உயரிய செல்வமாகக் கருதியது- நாட்டின் இளைஞர்களை ! இளைய தலைமுறை மேல் எந்த அளவு நம்பிக்கை இருந்தால், இருக்கும் எண்ணற்ற தடைகளைக் கருத்தில் கொள்ளாமல் "2020ல் இந்திய வல்லரசாகும்" என்று கூறியிருப்பார் . மிகப் பெரிய சவாலை நம் முன் எடுத்து வைத்துச் சென்றுள்ளார் திரு கலாம் அவர்கள். 
   
   இப்பதிப்பை, கண்களில் ஈரப்பதம் காயாமல், இப்படியொரு நாளில் பதிவு செய்வேன் என்று துளியும் யோசித்ததில்லை.
நமக்கு நேரம் வந்துவிட்டது, சிந்திப்பதற்கு அல்ல செயல் புரிவதற்கு..  
இதயத்தில் சுமப்போம் உங்களையும், உங்கள் கனவுகளையும்...!! 

வாழ்க பாரதம்வளர்க பாரதம் !
ஜெய் ஹிந்த் !!

Saturday, 25 July 2015

நண்பன் என்றாலே நல்லவன் தான்!!

                     பல நாட்கள் ஓய்வில் இருந்து விட்டு, "என் பெயர் தமிழ்..!!"  வலைப்பதிப்பு மீண்டும் விழித்துக் கொள்வதில் ஒரு வித மகிழ்ச்சி..

                "கல்லூரி வாழ்வே வருக!" என்கிற பதிப்பில் குறிப்பிட்டு இருந்தேன் "நண்பர்கள் தான் எனக்கு எல்லாம்" என்று. முற்றிலும் உண்மை. நண்பர்களைக் காணாத, அவர்களில் ஒருவரிடம் கூட பேசாத ஒரு தினம் என் மனதில் அல்லது  நினைவில் நின்றதாக எனக்கு நினைவில்லை (" இதனை இப்பதிப்பிற்காக எழுதுகிறேன்" என்று நீங்கள் நினைத்தால்  அது என் தவறல்ல).

            தலைவர் படமான "தளபதி"யில் ராஜாவின் இசையில் "காட்டுக்குயிலு மனசுக்குள்ள" பாடலின் ருசியே தனி. கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதைப் பல முறை உணர்ந்திருக்கிறேன். பாடலைப் பார்க்கும் சில நேரங்களில் சில இனிய நினைவுகள் விழியைத் தட்டி பார்க்கும்போது கிடைக்கும் உணர்வு இருக்கிறதே அது தனி ரகம். எழுத்துக்களில் விவரிக்கத் திணறுகிறேன் இவ்வரியை எழுதும்போதே. அப்படி ஒரு அதிசய சக்தி உள்ள அப்பாடலில் "பாசம் வைக்க நேசம் வைக்கத் தோழன் உண்டு வாழ வைக்க!என்கிற எட்டு வார்த்தைகள் போதும் என்னைப் போன்ற பலரை ஐந்து நொடிகளில் சிலிர்க்க வைக்க...

             நான்கு  பள்ளிகளில் படித்து இருக்கிறோம் நானும் என் (அண்ணனோ தம்பியோ எப்படி ஆனாலும் எடுத்துக்கொள்ளுங்கள்) சகோதரனும். நண்பர்கள் அதிகம் எங்கள் இருவருக்கும். கல்லூரியில் சேர்ந்த பின் இரு மடங்காகியது அந்த கணக்கு. காரணம் இருவரும் வெவ்வேறு துறை. அது கூட ஒரு வழியில் நல்லதாகி விட்டதே... ஒவ்வொரு விதத்திலும் துணையாய் இருக்கும் என் நண்பர்கள் அனைவருக்கும் என்னால் முடிந்தது இது ...





19.4.2014
                                          "அடே நண்பா"



என்நேரம் வான்பறக்க காரணமென்ன அடே நண்பா 
எந்நேரம் நான்மிதக்கக் காரணமென்ன அடே நண்பா !



நிமிடம் ஒன்று நொடியான காரணமென்ன அடே நண்பா 
சொல் ஒன்று பேச்சான காரணமென்ன அடே நண்பா !!



காற்றின் உருவம் நான்உணர்ந்த காரணமென்ன அடே நண்பா 
கடலின் ஆழம் நான்அளந்த காரணமென்ன அடே நண்பா !



இல்லாத ஒன்றை நான்அறிந்த காரணமென்ன அடே நண்பா 
சொல்லாத ஒன்றை நான்மறந்த காரணமென்ன அடே நண்பா !!



நண்பா நாம்,
செல்வோம் இறுதிவரை அடே  நண்பா -ஒன்றாய் 
வெல்வோம் இறுதிவரை அடே நண்பா !!

                                                               -பிரதாப் குமார்
                                                                      (தமிழ்)

              கருத்து சொல்ல விரும்பி, சொதப்பிய இரு வரிகளை நண்பர்கள் சிலர் கூறிய காரணத்தினால் இதில் இருந்து நீக்கப்படுகிறது.


Friday, 10 July 2015

இசையும் என் நண்பனே !!

                             என் இரண்டாம் பதிப்பில் குறிப்பிட்டு இருந்தேன்.. " நண்பர்கள் தான் எல்லாம்" என்று! அவர்களுள் ஒன்றாக நான் நினைப்பது இசையை !! உடனே "ராகம்", "சரணம்", "பல்லவி" என்ற வார்த்தைகளை இப்பதிப்பில் அதிகம் காணலாம் என்று நினைத்து விடாதீர்கள். இன்னும் கூட பல்லவி மற்றும் சரணம் ஆகிய இரண்டிற்கும் வித்தியாசம் அறியாத நல்லவன் நான் . இங்கே குறிப்பிடும் "இசை" என்பது இசை ஞானம் இல்லாத பாமரன் கூட ரசித்து அனுபவிக்கும் "திரைப் பாடல்களை".

                              ஒரு பாட்டு கூட கேட்காத ஒரு நாளை நாளாக மதிக்க மறுக்கும் "பாடல் பைத்தியம்" போன்றவன் என்பதில் ஒரு வித மகிழ்ச்சி தொற்றிக் கொள்வதை வெளிப்படுத்த வார்த்தைகள் தேடுவதில் என் நேரம் முடிகின்றது! இதற்காக அம்மா,அப்பா, அண்ணன் கிட்ட எவ்வளவு பேச்சு . அவ்வளவு திட்டு வாங்கியும் திருந்தவில்லையே !! விடுதியில் என்னுடன் இருக்கும் நண்பர்களுக்குத் தெரியும் என் அறையில் பாடல்களின் சத்தம் இல்லாத நிமிடங்கள் மிகக் குறைவு என்று !
  
                        பள்ளியின் இறுதி ருடம்...வகுப்பறையில்...இத்தனை ஆசையாய் பாடல்கள் கேட்கின்றோமே அதைப் பற்றிச் சில வரிகள்  எழுதி தான் பார்ப்போமே என்று எழுதியது இது. 

13.10.2012
                              “இசை”

எண்ணத்தைச் சீராக்கும் இசையே உன்னை மதிக்கின்றேன்
வண்ணத்தை மிகையாக்கும் இசையே உன்னைத் துதிக்கின்றேன்!

சிந்தனையைச் சிலையாக்கும் இசையே உன்னை வணங்குகின்றேன்
கற்பனையைக் கலையாக்கும் இசையே உன்னை வாழ்த்துகின்றேன்!!

மென்மையை மெய்ப்படுத்தும் இசையே                                                     உன்னைப் போற்றுகின்றேன்
இனிமையை வகைப்படுத்தும் இசையே                                                      உன்னைப் பாராற்றுகின்றேன்!

திசையெட்டும் பரவட்டும் இசையின் புகழ்


பாருக்குத் தெரிந்ததொன்றே- நீ கலையின் மகள்!!


முதலில் வாசித்தது என் அருமை உடன் பிறப்பு பிரதீப் குமார். என் சகோதரன் என்பதால் என்னவோ அடித்தான் நெத்தியடி "நல்லாவே இல்ல டா!!" என்று. ஒரு நிமிட ம் எதுவும் பேசவில்லை. ஓரிரு நாட்கள் சென்றது... அதே இடம் கிட்டத்தட்ட அதே நேரம் நீட்டினேன் இந்த வரிகளை ...


16.10.2012
                            “இசை

இசையில்லா நாளெல்லாம் என்னுள் காயமாகிப் போவதென்ன
இணையில்லா இசையெல்லாம் விண்ணுள் மாயமாகிப் போவதென்ன!

இசையில்லா நாளெல்லாம் யுகங்களாகிப் போனதென்ன
இசையுள்ள நாளெல்லாம் நொடிகளாகிப் போனதென்ன!!

காற்றிலுள்ள ஈரமெல்லாம் இசையாகிப் போகக்கண்டேன் 
வானிலுள்ள மேகமெல்லாம் இசையாகி நகரக்கண்டேன்!

கடலிலுள்ள மீன்களெல்லாம் இசையாகிக் குதிக்கக்கண்டேன்
நிலவிலுள்ள வெளிச்சமெல்லாம் இசையாகிப் பரவக்கண்டேன்!!

எண்ணி எண்ணி ரசிக்கின்றேன்-உன்னைப்பற்றிச்
சொல்லிச் சொல்லி வியக்கின்றேன் !!!
                                                                       
                                                                     -பிரதாப் குமார் 
                                                                               (தமிழ்)
எனக்கு மிகவும் பிடித்ததைப் பற்றி எழுதியதால் தான் என்னவோ, இந்த நாள் வரை நான் எழுதி கவிதைகளுள் எனக்குப் பிடித்த சிலவற்றுள் ஒன்றாய் இருப்பது இக்கவிதை  !!!

Saturday, 4 July 2015

கல்லூரி வாழ்வே வருக!

                     என் முதல் பதிப்பினை நேரம் ஒதுக்கி வாசித்து அதனை முகப்புத்தகத்தில் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கு நன்றி !!
                       பன்னிரண்டு ஆண்டுகள்-கணக்கில் கொஞ்சம் பெரிதாய்த் தெரிந்தாலும்  "சிரிக்க வைக்கும் நினைவுகளும், சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளும் நிரம்பப் பெற்றது!" என்ற பெருமை, பள்ளிப் பருவத்திற்கு என்றும்  உண்டு. இந்த உண்மை எனக்கு மட்டும் சொந்தம் இல்லை, பள்ளி சென்ற ஒவ்வொருவருக்கும் பொருந்தும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
                           எனினும், கல்லூரி வாழ்க்கையின் சுகமே தனி. பள்ளி சென்ற நாட்கள் நினைவுகள் தருமென்றால் கல்லூரி காலம் அனுபவங்கள் தரும்ஒன்றல்ல இரண்டல்ல ... பலபல அனுபவங்கள்... விதவிதமாய் ரகம் ரகமாய்!! "உன் வாழ்க்கை உன் கையில்!"- இதன் பொருள் புரியத் தொடங்குவது கல்லூரியில் தான். தன்  செயலைப் பொறுத்து தனக்கேற்ற முடிவுகள் அமையும்!
                    எனக்கு, பள்ளியில் படிக்கும்போதே ( பள்ளியில் நானும் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் படிப்பேனே!!) கல்லூரி செல்ல அத்தனை ஆசை. விடுதியில் தங்குவது என் கனவு.நிறைவேறியது என் பதினேழு வயதில்! "நண்பர்கள் தான் எல்லாம்!" என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் என்பதில் ஒரு வித பெருமை எப்பொழுதும் என்னுள் ஒளிந்து கொண்டு தான் இருக்கும். அது வெளிப்பட்டால் மகிழ்ச்சியின் எல்லையில் நிற்கின்றேன் என்று அர்த்தம். இதில் சந்தேகத்திற்கு சிறு இடம் கூட இல்லை
                         இந்த பதிப்பில் நான் பகிர்ந்து கொள்ள இருப்பது கல்லூரியில் நான் எழுதிய முதல் கவிதை.எழுதிய இடம், நேரம் கூட நினைவில் இருக்கிறது. இது கூட ஒரு வித சந்தோஷம் தானேஎதிர்பார்த்ததையும் எதிர்பார்ப்பதையும் கண்முன்னே கண்டு ரசிப்பதில் வரம் பெற்றவன் ஆகின்றேன் !!  


29.8.2013
                        "கல்லூரி வாழ்வே வருக!

கனவுகள் தொடங்கிய நாள் முதலே 
நிகழ்வுகள் மலர்ந்தன நாள் முதலே !

வாழ்த்துக்கள் தொடங்கிய நாள் முதலே 
வாசனைப் படர்ந்தது நாள் முதலே !!

தங்கை என்றதும் கொதித்திடும் தோழிகள் 
மச்சான் என்றதும் கலக்கிடும் தோழர்கள் !

யாவும் எந்நாளும் நான் ரசிப்பேன்...!!

மின்வெட்டு நேரம் அதிர்ந்திடும் விடுதி 
நள்ளிரவு கண்விழித்து நடந்திடும் அரட்டை !

யாவும் எப்போதும் நான் ரசிப்பேன் .. !!

கேள்வி கேட்டுத் துரத்திடும் கூட்டமும் 
கேலி செய்து அசத்திடும் கூட்டமும் !

யாவும் என்றென்றும் நான் ரசிப்பேன் ... !!

எதிர்பார்த்துக் காத்திருந்தேன் இந்த வாழ்விற்கு-என்றும் 
எதிர்பார்த்துக் காத்திருப்பேன் இந்த வாழ்விற்கு !
                          -பிரதாப் குமார்
                                                                       (தமிழ்)