Friday, 12 August 2016

வீழ்வேன் என்று நினைத்தாயோ?


மூன்று மாதங்கள் பறந்து விட்டன. முந்தைய பதிவிற்கும் இப்பதிவிற்கும் ஆண்டுகள் பல ஆன ஒரு உணர்ச்சி. தமிழ் பேசுவோம் !


"போர்க்களத்தில் பிறந்துவிட்டோம் வந்தவை போனவை வருத்தமில்லை. காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலியொன்றும் மரணமில்லை"- நா.முத்துக்குமார் கூறுகிறார் புதுப்பேட்டை  "ஒரு நாளில் வாழ்க்கை இங்கே" பாடலில்.  

போர்யுத்தம்சண்டைசச்சரவு எல்லாம் ஒரு முடிவைக் காண சிலரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் எதிரொலி. ஒருவன் பிறந்த சில நொடிகள் முதல் தன் நிரந்தர ஓய்வறைக்குள் செல்லும் வரைஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு இடத்திலும் ஏதேனும் இடையூறுகளை எதிர்நோக்கித்தான் ஆக வேண்டியிருக்கிறது. காரணம் பல. ஆணிவேராய் இது வரை இருந்து வந்ததும்இருக்கப் போவதும்  ஆசை ஒன்று மட்டும் தான்.

தவழும் குழந்தை முதல் முறை நடக்க முயலும்போது கண்டிப்பாக கீழே விழ தான் செய்கிறது. அழுகையால் தன் இயலாமையைக் கூறத் தான் செய்கிறது. அந்த அழுகையோடு அந்த அத்தியாயம் முடிந்து விடுகிறதாஇல்லை தானே. மீண்டும் ஒரு முயற்சிதன் ஆசைத் தாயின் தூண்டுதலின் பேரால் மீண்டும் விழும். மீண்டும் மீண்டும் முயற்சி. நடப்பது தன் இயற்கை என்பதை உணர்ந்ததோ என்னவோ நடந்து பழகும் வரை அதை விடுவதாய் இல்லை.  

மழலையாய் இருக்கும்போது செய்த முயற்சியை ஏன் நம்மால் தெளிவு பெற்ற பின்னர் செய்ய முடிவதில்லைஎல்லாம் நம்மை நாமே கட்டிப் போட்ட கதை தான். நம்மால் இவ்வளவு தான் முடியும் என்று நம் முழு பலத்தை சோதனைக்கு உண்டாக்காமல் நிறுத்திக் கொள்கின்றோம். 



12.08.2016

                              "முடியும் வரை போராடு"

பார்ப்பது எல்லாம் வர்ணம் பூசுமென
கண்மூடிச் சொல்வது யார்?

கேட்பது எல்லாம் தேன் ஊற்றுமென
செவிசாய்த்துச் சொல்வது யார்?

சொல்வது எல்லாம் இன்பம் பயக்குமென
நாவசைத்துச் சொல்வது யார்?

தரையில்,
சுறுசுறுவென சுற்றித்திரியும் எறும்புகள் நாம்
வழிமறிக்கமுயலாமல் திரும்பிடுமா?

நீரில்,
துள்ளித்துள்ளி நீந்தித்தாவும் மீன்கள் நாம்
வலைவீசதாவாமல் மூழ்கிடுமா?

வளியில்,
சிலுசிலுவென பறந்தோடும் தென்றல் நாம்
விலைபேசபரவாமல் அடங்கிடுமா?

விளக்கில்,
பளபளவென ஒளிவீசும் சுடர் நாம்
கையசைக்கதயங்காமல் அணைந்திடுமா?

வானில்,
சடசடவென சிறகடித்தாடும் பறவை நாம்
வான்பறக்கநகராமல் இருந்திடுமா?

எதிர் பார்த்ததெல்லாம் எதிர் பார்த்தபடி
நடக்குமென எழுதிய விதி ஒன்றில்லை!

எடுத்துச் செய்வதெல்லாம் என்றும் சொன்னபடி
முடியுமென அளித்த உறுதி ஒன்றில்லை!

சிதறாமல் வழிதேடி கலங்காமல் போராடி
முயன்றால் முடியாத செயல் ஒன்றில்லை!

நண்பாவிடியும் வரை வழிதேடு
அசராமல்முடியும் வரை போராடு.!!

                                                                   - தமிழ்


உதாரணங்கள் சொல்ல, வாழ்ந்து மறைந்தும் நம்முடன் வாழ்ந்து கொண்டும் இருக்கும் உயிர்கள் பல. முயற்சியை ஊக்கப் பொருளாய்ப் பயன்படுத்தித் தான் பார்ப்போமே!! விழித்திட சில நேரம் போதும். உயர்ந்திட நேரம் கூடும். வெற்றி நமதே !! 


Saturday, 2 April 2016

நேரம்-போனால் வராது !!

                  நேரம்..காலம்..மணித்துளி..நொடி..நிமிடம்..நாழிகை..ஜாமம்..நாள்..வாரம்..மாதம்..வருடம்....!
       "காலம் பொன் போன்றது" - முன்னோர் கூற்று. சரி தான்.  கடந்து போன நொடி ஒன்றை மீண்டும் கொண்டு வர எத்தனைப் பெரிய மாயாவியாலும் முடியாத காரியம். சில பல திரைப்படங்களுக்கு மட்டும் விதி விலக்கு. பரபரப்பாகவே காணப்படும் இந்த அதிசய உலகில் நேரத்தின் மதிப்பை அளவிடுவது மிகவும் கடினமான செயல். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே மதிக்கப்படுகிறது.

        இந்த பதிவு 4,5 நண்பர்களை யோசிக்க வைத்தாலே எனக்கு அது பெரிய வெற்றியே! சிலருக்கு மனம் உறுத்தினால் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் தொடக்கத்திலேயே கூறிக் கொள்கின்றேன்.  நேரத்தைத் தெளிவாகச் செலவிட வேண்டும் தான். அதற்காக உடலை வருத்திக் கொண்டு அப்படிச் செய்ய வேண்டும் என்பது சொல்லிக் கொள்ளும் விஷயம் அல்ல, பாராட்டக் கூடிய ஒன்றும் அல்ல.

        முதலில் நினைவில் தோன்றுவது உணவும் தண்ணீரும். "தண்ணி குடிச்சாவது நான் உயிர் வாழுவேன் !"னு வியப்புடன் ஒருவர் கூறக் கேட்டிருப்போம். தண்ணீர் - உயிர் வாழ மிகவும் அவசியம் என்பதை அனைவரும் அறிவோம். மூன்று வருடம் விடுதியில் தங்கியிருக்கிறேன். தண்ணீர் குடிக்க அல்லது பிடிக்க 10 அடி தான்  நடக்க வேண்டுமென்றாலும் போக வேண்டுமா என்று பல முறை யோசிக்கும் உயிர்களின் எண்ணிக்கை ஏராளம். பக்கத்து அறையில் உள்ள நண்பன் வைத்திருக்கும் நான்கு சொட்டு தண்ணீரில் இரண்டு சொட்டு எடுத்து வாயில் தெளித்து விட்டு வெளியேறும்போது அங்கேயே அப்பொழுதே கண்ணத்தில் அறைந்துவிடத் தோன்றும்.

        காலை உணவு அருந்துதல்- ஒருவன் காலை உணவை அரசனைப் போன்று எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் உண்டு. 6-7  மணிநேரம் உறக்கத்திற்குப் பிறகு நன்றாக உணவு உட்கொண்டால் தான் வயிற்றினுள் சுரக்கும் அமிலத்தின் விளைவு பெரிதாக இருக்காது. னால் இரவு தூங்காமல் கைப்பேசியுடனும் மடிக்கணினியுடனும்  முழு நேரத்தையும் செலவிட்டு தூக்கத்தைத் துறந்து நாட்களைக் கடத்தும் நண்பர்கள் பலரை நான் பார்த்து வருகிறேன். காலை சாப்பிட வேண்டும் என்பதையே அவர்கள் மறந்து சில பல வருடங்கள் ஆயிற்று போலும். வகுப்பில் திணறுவதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துக் கொள்வர். ஒரு பக்கம் பாவமாக இருக்கும் ஒரு பக்கம் கோபமாகவும் இருக்கும். பெற்றோரிடம் அதைச் சாப்பிட்டேன் இதைச் சாப்பிட்டேன் என்று பொய் வேறு. யார் யாரோ நிறைய பேசிப் பார்த்தும் மாற்றம் உண்டாகவில்லை. போகப் போக விளைவுகளைப் புரிந்து நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு. இதைப் பார்க்கவும்.

29.6.2013

நேரமில்லை வலிக்கிறது! "
                                            
நேரமில்லை வலிக்கிறது நேரமில்லை வலிக்கிறது  வீட்டுக்குள்
சிரித்துப் பேசி ரசிக்க நேரமில்லை வலிக்கிறது வண்ணம்பல

எண்ணங்கள் எண்ணி ருசிக்க நேரமில்லை வலிக்கிறது கட்டங்கள் 
 தாவிக் குதித்து ஆட நேரமில்லை வலிக்கிறது சட்டங்கள் 

மதித்துப் பழகி வாழ நேரமில்லை வலிக்கிறது மெட்டுக்கள் 
கேட்டுப் பாடிப் பறக்க நேரமில்லை வலிக்கிறது யாருக்கும்

நேரமில்லை வலிக்கிறது நேரமில்லை வலிக்கிறது ஒருநாளும் 
நேரமில்லை வலிக்கிறது நேரமில்லை வலிக்கிறது 
     
                                                                                                      - தமிழ்

         அன்பர்களுக்கென நேரத்தைச் செலவிடுவது அடுத்து. உறவினர்களின் பெயர் கூட தெரியாமல் இருக்கும் இளைஞர்கள் பலர். நானும் அதில் ஒருவன் என்பதில் கொஞ்சம் வருத்தம் தான். அதெல்லாம் இருக்கட்டும்..அம்மா அப்பாவிடம் பேச கூட நேரமில்லை நமக்கு. அதை விட முக்கியமான வேலை இருக்கிறது அல்லவா நமக்கு. பிடித்த மாதிரி நம் நேரத்தைச் செலவிட, பிடித்த விஷயங்களைப்  பிடித்த நேரத்தில் செய்திட கூட நேரமில்லை. கஷ்டம் தான். எப்போது புரியும் இதன் முக்கியத்துவம்? எப்போது காணுவோம் பல மாற்றங்கள்? நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என்று நம்பிக்கை கொள்வோம்.